Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த 28-ம் பதவியேற்றார். இவருக்கு பிராணிகள் வளர்ப்பு, திரைப்படங்கள் பார்ப்பது, புத்தகம் வாசிப்பது உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் உண்டு. தனது செல்லப்பிராணிகளின் மீதான காதலை கடந்த முறை உள்துறை அமைச்சராக இருந்தபோது பணியில் சிறந்து விளங்கிய மோப்ப நாய்களுக்கு பதக்கம் வழங்கும் போது வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் பசவராஜ் பொம்மையின் வீட்டில் 14 ஆண்டுகள் செல்லமாக வளர்த்த நாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தது. அந்த நாயை வீட்டின் முன்பாக கிடத்தி மாலை அணிவித்து குடும்பத்தோடு பசவராஜ் பொம்மை இறுதி மரியாதைகள் செய்தார். பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் இறந்த செல்ல நாயை தடவி கண்ணீர் விட்டு அழுததோடு நெற்றியில் முத்தமிட்டார். அவரைத் தொடர்ந்து மனைவி, மகள், மகனும் செல்ல பிராணிக்கு கண்ணீருடன் முத்தமிட்டு கையெடுத்து கும்பிட்டனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. செல்ல பிராணிகளை நேசிக்கும் ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, 'செல்ல பிராணிக்காக கண்ணீர்விட்டு அழும் அளவுக்கு அதன் மீது அன்பு கொண்ட ஒருவர் (பசவராஜ் பொம்மை) கர்நாடகாவின் முதல்வராக கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ 'என குறிப்பிட்டுள்ளனர்.